இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 3 நவம்பர், 2017

இரண்டாம் ஆண்டு நினைவுகள்!

இரண்டு ஆண்டுகள் ஓடி மறைந்ததே அம்மா!
மனத்துயர் இன்னும் ஓயாமல் அடிக்குதே அம்மா!
ஸ்கைப்பில் வந்து கதைத்த நினைவுகள் 
நகைச்சுவையோடு சிரித்த பொழுதுகள் 
சுவிஸ்,ஜெர்மனி வந்து திரும்பிய மீட்டல்கள்
எல்லாம் இன்றுபோல் இருக்கிறது அம்மா!
போலிகள் உலகம் அம்மா!
உலகமே போலி அம்மா!
உடல் கூட போலி அம்மா!
வாழ்க்கையும் போலி அம்மா!
கனவுகள் போலே எல்லாம் கலைந்து 
போனதே அம்மா!
ஆறுதல் தேட தந்தையும் இல்லை! 
தேடி அழைக்க அன்னையும் இல்லை!
பாசத்தை கொட்ட இருவரும் இல்லை!
எப்படித்தானோ நினைவை மறப்பது?
காவியம் தானே எந்தனுக்கு நீங்கள்!
காலத்தால் அழிய விடாது பொக்கிஷமாய் 
காப்பேன் உங்கள் வரலாறுதனை!
(எமது தாயார் திருமதி கனகம்மா பசுபதி அவர்கள் 04.11.2015 அன்று எம்மை விட்டு பிரிந்து 04.11.2017ல் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு இது இடுகையிடப்படுகிறது)

வியாழன், 29 ஜூன், 2017

எட்டாம் ஆண்டு நினைவுகள்!

எங்களுக்கு உயிர் கொடுத்த பாசமிகு தந்தை எம்மை உடலால் பிரிந்த துயரமிகு 8ம் ஆண்டு நினைவு நாள் [30.06.2017]இன்றாகும்.அன்பாலே எம்மை கட்டுப்படுத்தியவர்,செயற்பாடுகளாலே நீதியை போதித்தவர்,பிழையை பொறுத்துக்கொள்ளாத கோபக்காரர்,எதிரியே வீடு தேடி வந்து விட்டால் வரவேற்கும் பண்பாளர்.ஒரு ஆபத்தென்றால் ஓடிவரக்கூடிய[சொந்தங்களை தவிர்த்து]நிறைய நட்புக்களை சேர்த்து வைத்திருந்தவர்.அவர் எனது தந்தை என்பதுக்கும் அப்பால் சிறந்த நட்போடும் இருந்தவர்.தொலைபேசியில் உரையாடும் போது கூட எனது மனக்கவலைகளை நான் அவரிடம் மட்டும்தான் பகிர்ந்துகொள்வேன்,அரசியல் நிலவரங்கள்,ஊரவர்கள் பற்றியெல்லாம் பேசிக்கொள்வோம்.இன்று எட்டாண்டுகள் ஓடி மறைந்து விட்டன,ஆனாலும் கனவுகளிலும் நினைவுகளிலும் அவரது எண்ண ஓட்டங்கள்தான் நிறைந்து கிடக்கின்றது.